Sunday, December 16, 2007

நீதிக்குத்துறைக்குத் தலைகுனிவு.

நீதிக்குத்துறைக்குத் தலைகுனிவு.

நேற்று செய்தித்தைளை பார்த்தவுடன் எனக்கு தூக்கி வாரிப்போட்டு விட்டது. எனக்கு மட்டுமல்ல அந்த செய்தியைப் படித்த அனைவரின் நிலையும் அதுவாகத்தான் இருந்திருக்கும் என்பது என் தீர்க்கமான எண்ணம்.

அந்த செய்திதையைப் படித்த உடன் சம்மந்தப்பட்ட நபர்களை புழுவிலும் இழிந்தவர்களாகவே எனக்கு எண்ணத்தோன்றியது. உங்களுக்கும் இதே மனநிலை ஏற்பட்டு இருக்கலாம்.

விசயத்திற்கு வருவோம்.

“சரவணபவன் ஓட்டல் அதிபர் இராஜகோபால் ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தக்குமாரைக் கொன்றதாக தொடுக்கப்பட்ட வழக்கில் செசன்ஸ் நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை கொடுத்தது. மேற்படி வழக்கில் சென்னை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இராஜகோபால் ஜாமீனில் வெளிவந்தார்.

இந்த நிலையில் மேற்படி வழக்கில் தனியாக இராஜகோபாலுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை கொடுக்க வேண்டும் என்று காவல் துறை மேல் முறையீடு செய்தது.”

இதுவரை நடந்த விசயங்கள் பெறும்பாலான வழக்குகளில் நடப்பவை தான். ஆனால் அதற்குப்பிறகு நடந்த சம்பவம் தான் சாதாரண மனிதர்களையும், ஏன் போலீசார் உட்பட மற்றத் துறைகளில் வேலை செய்பவர்களையும் புருவம் உயர்த்தச் செய்துள்ளது. ஏன் நீதித்துறையில் உள்ள கண்ணியமானவர்களையும் கண்டிப்பாக இது காயப்படுத்தித்தான் இருக்கும். இருக்க வேண்டும்.

விசயத்தைத் தொடர்வோம்...

மேற்படி இராஜகோபாலின் மேல்முறையீட்டு மனுவும் காவல் துறையினரின் மேல் முறையீட்டு மனுவும் விசாரணைக்கு வந்த போது தான் இந்த அசிங்கங்கள் அரங்கேரத்தொடங்கின.

ஆம்!... இந்த இரு மனுக்களும் முதலில் நீதிபதிகள் டி.முருகேசன், கே.என். பாஷா இருவர் அடங்கிய பென்ஞ்சின் முன் விசாரணைக்கு வந்தது. அவர்கள் இருவரும் வழக்கை விசாரிக்க விரும்பவில்லை என்று ஒதுங்கிக்கொண்டார்கள்.

அதன் பின் மனுக்கள் இரண்டும் நீதிபதிகள் பி.டி. தினகரன், இரகுபதி இருவர் அடங்கிய பென்ஞ்சின் முன் விசாரணைக்கு வந்தது. அவர்கள் இருவரும் கூட மனுக்களை விசாரிக்க மறுத்துவிட்டனர்.

மூன்றாவதாக, மனுக்கள் இரண்டும் நீதிபதிகள் டி.முருகேசன், பெரிய கருப்பையா இருவர் அடங்கிய பென்ஞ்சின் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது இரு நீதிபதிகளும் சொன்ன வார்த்தைகள் இந்திய நீதித்துறையின் ஏடுகளில் பொன் எழுத்துக்களால் பொரிக்கப்படவேண்டியவை.

அந்த பொன்மொழிகளை நீங்களும் பாருங்கள்...

இந்த வழக்கை விசாரிக்க நாங்கள் முன்வந்தோம். ஆனால், எங்களுக்கு பல வழிகளில் மிரட்டல் கடிதம் வருகின்றது. இதில் அவதூராகக் கருத்துக்களை கூறியுள்ளனர். இந்த நிலை தொடர்ந்தால் எந்த நீதிபதிகளும் இந்த வழக்கை விசாரிக்க முன்வரமாட்டார்கள்.
ஏற்கனவே 2 டிவிசன் பென்ஞ் விசாரிக்க மறுத்துள்ளது. இந்த வழக்கை ஆரோக்கியமாக, சுதந்திரமாக விசாரிக்க முடியவில்லை. நீதித்துறை சுதந்திரமாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது நீதித்துறைக்கு அழகல்ல.
நாங்களும் சாதாரண மனிதர்கள் தான். எங்களுக்கும் குடும்பம், குழந்தைகள் உள்ளனர். அவர்களுக்கு நாங்கள் எப்படி பாதுகாப்பு அளிக்க முடியும். பொய் தகவல்கள் கூறி, மிரட்டல் கடிதம் வருகின்றது. நாங்கள் வக்கீல் தொழிலை தியாகம் செய்து விட்டு நீதிபதிகளாக பணியாற்ற வந்துள்ளேம். எங்களுக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டுள்ளது மனவருத்தம் அளிக்கின்றது.

எனவே, இந்த வழக்கை நாங்கள் விசாரிக்க விரும்பவில்லை. இதை வேறு நீதிபதிகள் விசாரணைக்கு அனுப்ப தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கின்றோம்”.... என்று அந்த நீதிபதிகள்! தங்கள் திருவாய் மலர்ந்துள்ளார்கள்.

எனக்கு மேற்படி நீதிபதிகளின் கூற்றைப்படித்த பின் மண்டையைபோட்டுக் குடையும் கேள்விகள்,
  • இராஜகோபாலின் வழக்கை பதிவு செய்து, விசாரணை செய்து, இராஜகோபாலை கைது செய்த இன்ஸ்பெக்டர், வழக்கு விசாரணைக்கு துணையாக இருந்த சப்-இன்ஸ்பெக்டர், ஏனைய காவலர்கள் இவர்களுக்கு குடும்பம் ஏதும் இல்லாமல் இருந்திருக்குமோ?...
  • வழக்கை நடத்திய அரசு வழக்குரைஞரும், சாட்சி சொன்ன சாட்சிகள், வழக்கை விசாரித்து 10 ஆண்டுகள் தண்டனை வழங்கிய செசன்ஸ் நீதிபதி இவர்களுக்கெல்லாம் குடும்பம் குட்டி இருந்திருக்காதோ?...
  • இராஜகோபாலை ஜெயிலில் வைத்து கண்காணித்த சிறை அதிகாரிகளுக்கு கூட குடும்பம் இருந்திருக்காதோ?
  • ஒருவேளை குடும்பம் இருந்து அவர்களுக்கு இராணுவம் முழு நேரமும் பாதுகாப்பு கொடுத்து இருக்குமோ?... இருக்கலாம், இருக்கலாம்.
  • ஆமா இராஜகோபால் என்ன அரசாங்கமா?...அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதியா?... இவர்வளை விசாரணையை சுதந்திரமாக விசாரிக்க விடாமல் தடைசெய்து விட....
  • அடடா வக்கில் தொழிலை தியாகம் செய்து விட்டு இந்த பணிக்கு வந்துவிட்டார்களாம் தியாகிகள்...
  • இவர்களுக்கு இந்த வழக்கை விசாரிக்க மனமில்லை... சரி ஒத்துக்கொள்வோம். வரும் நீதிபதிகள் எல்லாம் இந்த வழக்கை விசாரிக்க மனமில்லை என்றால் இந்த வழக்கை யார் விசாரிப்பதாம்?!...
  • வழக்கை விசாரிக்க சத்தியற்றவர்கள் எல்லாம் நீதிபதிகள் பதவியில் அவசியம் தானா?!
  • வீட்டிற்கும் தனக்கும் போலீஸ் காவலுடனேயே அலையும் உயர்நீதிமன்ற நீதிபதிகளே வழக்கை விசாரிக்க பயந்து நடுங்கும் போது எந்த காவல் துறை அதிகாரி வழக்கை விசாரிக்க முன் வருவார், எந்த பொது ஜனம் சாட்சி சொல்ல முன் வருவார், எந்த அரசு வழக்கறிஞர் வழக்கை விசாரிக்க வருவார். எந்த கீழ் நீதிமன்ற நீதிபதி வழக்கை விசாரிப்பார். யார் இவர்களுக்கும் இவர்களின் குடும்பத்திற்கும் பாதுகாப்பளிப்பார். ஓ...இவர்களுக்கெல்லாம் பாதுகாப்பு எதற்கு?! இவர்கள் என்ன மனிதர்களா என்று நினைக்கின்றனரோ உயர்நீதி மன்ற நீதிபதிகள்?!... நினைத்தாலும் நினைப்பார்கள்.
எனது சிரம் தாழ்ந்த வேண்டுகோள் அரசுக்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் தவறான வழிகாட்டுதலுக்கு அடிக்கோடிடும் இது போன்ற நீதிபதிகள் மேல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த நடவடிக்கை மற்ற நீதிபதிகளுக்கும் ஒரு படிப்பினையாக அமையும் வகையில் இருக்கவேண்டும். இது தவறும் பட்சத்தில் நீதித்துறை என்ற ஒன்றின் மேல் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை செத்துவிடும்.

துணிவுள்ளம் கொண்ட நேர்மையான நீதிபதிகள் மன்னிப்பார்களாக.
****

Monday, October 22, 2007

ஆபாசத்தின் உச்சியில் கலைஞர் TV....

ஆபாசத்தின் உச்சியில் கலைஞர் TV.

விஜய் டிவி நடத்தி வந்த நடனப் போட்டி நிகழ்ச்சி ஜோடி நம்பர் – 1 ஐத் தொடர்ந்து சன் டீவி, கலைஞர் டீவி போன்றவையும் அதே போன்ற நிகழ்ச்சியை நடத்த ஆரம்பித்து விட்டன. ஒவ்வொறு டிவி நிறுவனத்தினரும் கணிசமான தொகையை பரிசாக அறிவித்து நிகழ்ச்சியும் ஜெஜெ என நடந்து கொண்டிருக்கின்றது.

இதில் கலைஞர் டிவி நடத்தும் நடன நிகழ்ச்சியின் நடுவர்களாக டான்ஸ் மாஸ்டர் கலா, டான்ஸ் மாஸ்டர் பிருந்தா, நடிகை சிம்ரன் ஆகியோர் இருந்து வந்தனர். என்ன காரணத்தாலோ திடீரென சிம்ரன் நடுவர் பதவியிலிருந்து நின்றுவிட (or) நிறுத்தப்பட்டுவிட நடிகை நமீதா நடுவர் இருக்கையைப் பிடித்துக்கொண்டார். எந்த நடிகை நடுவரா இருந்தா உனக்கென்னெய்யா வந்தது என நீங்கள் கேட்பது புரிகின்றது.

நமீதா நடுவராக வந்த நாளில் இருந்து அவரது உடை நம் மனதை என்னவோ செய்து கொண்டிருந்தது. அதுவும் நேற்று 21.10.2007-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை நமீதா அணிந்து வந்திருந்த பேபி பிராக், மன்னிக்கவும் சீதுரூ பேபி பிராக் மனதை ரணப்படுத்தியது என்பதோடு அவர் அந்த உடையை உடுத்திக்கொண்டு உடலை அசைக்க முடியாமல் அசைத்தது ஆபாசத்தின் எல்லை....என்றே சொல்ல வேண்டும்.

கலைஞர் டீவியின் பெரும்பாலான நிகழ்ச்சிகளை கலைஞர் பார்த்து ஒப்புதல் அளித்தப்பின் தான் ஒளிபரப்பு செய்யப்படுகின்றது என்பது பத்திரிகை செய்தி. அப்படியிருக்க இந்த நிகழ்ச்சியையும் கலைஞர், தமிழ் பண்பாட்டுக் காவலர் பார்த்து இரசித்து அதன்பின் தான் ஒளிபரப்பினார்களா?... அல்லது பண்பாட்டுக் காவலரின் கண்களில் காட்டப்படாமலேயே ஒளி பரப்பிவிட்டார்களா?....

இந்த நிகழ்ச்சியை கலைஞர் பார்த்து இரசித்து அதன் பின் இந்த நிகழ்ச்சி ஒளி பரப்பப்பட்டு இருந்தால் வாழ்க தமிழ், வாழ்க தமிழர் பண்பாடு, நீடூடி வாழ்க தமிழ் பண்பாட்டுக் காவலர்.

இந்த நிகழ்ச்சியை கலைஞர் கண்களுக்கு காட்டாமலேயே ஒளி பரப்பியிருந்தார்களானால் நிகழ்ச்சியின் தரத்தை கண்காணித்து தமிழ் காவலர் தமிழனின் மானத்தை கப்பலேற்றாமல் இருக்க ஆவன செய்வது நல்லது. (நான் மட்டுமா என் டீவில காட்டுரேன்... ஊருல உள்ளவன்லா காட்ரான்பா என பதில் கூறிவிடாதீர்கள் தமிழ் காவலரே....)



கலைஞர் டீவி நிர்வாகத்திற்கும் கலைஞருக்கும் சில கேள்விகள்:
1. சிம்ரன் ஆடைகுறைப்பு செய்யாததனால் தான் அவரை நீக்கினீர்களா?...
2. நிகழ்ச்சியில் ஆடுபவர் ஆடைகுறைத்தால் பரவாயில்லை என்று கூட எடுத்துக்கொள்ளலாம், நடுவரையே ஆடைகுறைப்பு செய்ய வைப்பது முறையா?.


நமீதாவிற்கு சில அறிவுறுத்தல்கள்.

1. Miss. நமீதா நடுவராக மட்டும் இருந்தால் போதாது. நடுவருக்கான கண்ணியத்தைக் காக்கும் உடைகளையும் அணியக்கற்றுக் கொள்ளுங்கள்.
2. தமிழில் பேச முயன்றால் மட்டும் போதாது. தமிழ் கலாச்சாரப்படி தமிழ் நாட்டில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் நடந்து கொள்ளப்பழகுங்கள்.

Monday, October 08, 2007

சரத் நீங்களுமா?!....

“சிறுவர்கள் தான் தொப்புளில் பம்பரம் விட்டு விளையாடுவார்கள். ஆனால் பெண்களின் தொப்புளில் பம்பரம் விட்டவர் ஆட்சி அமைக்கப் போவதாக கூறுகிறார். இதைப் பற்றி வேறெதுவும் நான் சொல்ல விரும்பவில்லை" (சரத்குமார்).

அரசியலுக்கு வரும் ஒவ்வொருவரும் தாங்கள் ஏதோ புரட்சியைச் செய்து விடப்போவதாக பரபரப்பாகத்தான் அரசியல் அரங்கத்தில் நுளைகின்றார்கள். ஆரம்பகாலத்தில் அவர்களின் சரவெடிகளும் காரசாரமாகவே இருக்கின்றது. மக்களுக்கும் இவர்களாவது நல்ல அரசியல் வாதியாக நல்ல ஆட்சியைத் தருபவர்களாக இருக்கமாட்டார்களா என்ற நப்பாசை மனதில் எழத்தான் செய்கின்றது.

ஆனால் பரிதாபம் சிரிது நாட்களிலேயே நமத்துப்போய் நாங்களும் பழைய பட்டாசுகள் தான் ஏற்கனவே இருந்த குட்டையில் ஊரிய புதிய ஆனால் அதே பழைய குணம் கொண்ட மட்டைகள் தான் என நிரூபித்து மக்களின் மனதில் ஒவ்வொரு முறையும் தளிர்க்கும் நம்பிக்கை விருட்சத்தின் தளிர்களை நசுக்கிவிடுகின்றார்கள்.

அதனால் தான் பாமரர்களும் படித்தவர்களும் அரசியல் என்றால் தங்களுக்கு சம்மந்தம் இல்லாத ஒன்று என்றும் தீண்டத்தகாத ஒன்று என்றும் எண்ணத் தலைப்பட்டு பல காலமாகிவிட்டது.

நடிகர் சரத்குமார் அரசியலுக்கு வந்த உடன் அவர்மேலும் அதே நம்பிக்கை தெரிவதாகவே நம்பினேன். இந்த மட்டையாவது தனக்கான புதிய குளத்தை அமைத்துக் கொள்ளும் என சின்ன நம்பிக்கை இருந்தது. அவரது நடவடிக்கைகளும் நம்பிக்கை ஊட்டுவதாகவே இருந்தது.

ஆனால் மேலே உள்ள அவரது பேச்சு அவரும் பழைய குட்டையில் ஊரிய பழைய குணம் மாறாத புதிய மட்டை என்பதை பறைசாற்றுவதாகவே செய்கின்றது.

அரசியல் நாகரீகத்தை வளர்த்துக்கொள்ளுங்கள் சரத். உங்களை நீங்களே தாழ்த்திக்கொள்ளாதீர்கள்.


சரத்திற்கு ஒரு கேள்வி: காமுகர்கள் தான் பெண்களை கர்ப்பழிப்பார்கள், மானபங்கம் செய்வார்கள்... பெண்களை கர்ப்பழித்தவர்கள் அடுத்த முதல்வர் நான் தான் எனக்கூறுவது சரியா?! சரத்.

Wednesday, August 30, 2006

நாதியற்றவர்கள்!...


படத்தை கிளிக்செய்து செய்தியை படிக்கவும்,
நன்றி: தினமலர்.

Saturday, August 19, 2006

நெஞ்சு பொருக்குதில்லையே!...

"நெஞ்சு பொருக்குதில்லையே நெஞ்சு பொருக்குதில்லையே
இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால் "


பொதுவாகவே எனக்கு போலீஸ்காரர்கள் மீது பரிதாப உணர்ச்சியும் மரியாதையும் உண்டு. பரிதாப உணர்ச்சிக்கு காரணம் ஓய்வு ஒவிச்சல் இல்லாத அவர்கள் வேலை. மரியாதைக்கு காரணம் பெரும்பாலான போலீஸ்காரர்கள் அவர்களுக்குள்ள கடுமையான நெருக்கடியான சூழ்நிலையிலும் சிறப்பாக பணியாற்றுவதன் காரணமாகவே நாம் நம் அன்றாட பணிகளில் நம் கவனத்தை செலுத்தி பணியாற்றவும் பயமின்றி வாழவும் முடிகின்றது.
ஆனால் அவர்கள் எவ்வளவுதான் சிறப்பாக பணியாற்றினாலும் போலிஸில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தில் உள்ள புல்லுருவிகளின் செயலால் மொத்தக் காவல்துறையும் கழங்கப்பட்டு நிற்கின்ற இழி நிலை ஏற்படுகின்றது.
காவல் துறையினர் செய்யும் நல்ல காரியங்கள் மறந்து அவர்களை மக்கள் இழிவாக பார்க்க சிலகாரணங்கள்,
  • லஞ்சம்.
  • குறிப்பாக ட்ராபிக் போலீஸாரின் அரட்டல் உருட்டல் கையேந்தல்.
  • புகார் தர வரும் அப்பாவிகளிடமும் பரிவின்றி நடந்து கொள்ளும் இணக்கமில்லாத குணம்.
  • காவல் நிலையத்திற்கு வருபவர்களிடம் மரியாதையின்றி நடந்து கொள்வது.

இன்னும் பல காரணங்கள்.

போலீஸ்காரர்களின் இந்த லீலைகளை கட்டுப்பதுத்த முடியுமா என்றால் கண்டிப்பாக முடியும். அதற்கு என்ன செய்ய வேண்டும்?.
  • நானும் நீயும் திருந்த வேண்டும்.
  • நாம் சட்டத்தை மீராமல் இருக்க நம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.
  • நாம் தவறு செய்ய நேர்ந்தால் அதற்கான தண்டணையை ஏற்கும் மனோபாவம் வேண்டும்.
  • தவறு செய்யும் போலீஸ்காரர்கள் பற்றி மேலதிகாரிகளிடம் புகார் செய்யும் துணிச்சல் வேண்டும்.
  • நேரடியாக சென்று புகார் செய்ய முடியாத போது புகார் கடிதம் மூலமாகவாவது செய்வது நன்று.

இதெல்லாம் செஞ்சி என்ன பிரயோஜனம்?, நடவடிக்கை எடுக்கவா போகின்றார்கள் என நீங்கள் வினவுவது எனக்கு கேட்கிறது. ஆனால் நீங்கள் நினைப்பது தவறு. நீங்கள் புகார் செய்யும் பட்சத்தில் அது உண்மையான புகாராக இருந்தால் அந்த நீங்கள் குறிப்பிடும் லஞ்சலாவண்ய பேய் சில காலமாவது வீட்டிற்கு போவது உறுதி.

இதை நாம் செய்யத்துணியாத வரை நாம் புலம்பித்திரிய வேண்டியது தான்.

Tuesday, June 27, 2006

முகவுரை

எனக்கு
அறிமுகமே தேவையில்லை!
ஆயினும் என்னை பிரகடனப்படுத்தி விடுகிறேன்.

என்னை
நீங்கள் எல்லோரும் அறிவீர்கள்.
நானும்
உங்கள் அனைவரையும் அறிவேன்.

அனுதினமும்
பரஸ்பரம் இருவரும்
விவாதித்துக்கொண்டு தானிருக்கின்றோம்.
ஆனால்
சூழ்நிலைச் சிறையில் சிக்குண்டு
கைதியாய் நீங்கள்...
நானோ
நிழலாய் உங்களோடு.

உங்களின் பார்வை
கிணற்றுவாழ் தவளையொப்ப
சுறுங்கிவிட்டது...?!

உங்களுக்கு,
எது நடந்தால் நமக்கென்ன...
நாம் வாழ்கிறோமே- என்ற
மனநிலை ஓங்கிவிட்டது...
தட்டிக்கேட்கும் தைரியம் குறைந்து விட்டது.
ஒழுக்க சிந்தனைகள் மழுங்கிவிட்டது.
கடமை உணர்வை
அடகுவைத்துவிட்டீர்கள்...

இனியும்
நான் உங்களோடிருந்தால்...?!!!
நான் உங்களின் மனசாட்ச்சியே அல்ல?!

இனி நான்
உங்களின் அழுத்தப்பட்ட
உணர்வுகளின் பிரதிபலிப்பு.
மறைக்கப்பட்ட உண்மைகளின் வினா?!
சமூக அவலங்களுக்கோர் சாட்டையடி.